31/10/2025
திராவிட இயக்கம் எப்போதுமே புத்தகங்களைப் படைப்பதிலும் படிப்பதிலும் முன்நிற்கும் இயக்கம்.
தந்தை பெரியார் தன் கருத்துகளைப் பரப்ப புத்தகங்களை ஓர் ஆயுதமாய் கையாண்டார். கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை, அம்பேத்கரின் ‘சாதி ஒழிப்பு’, பகத்சிங்கின் ‘நான் ஏன் நாத்திகன் ஆனேன்?’ ஆகிய புத்தகங்களைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார்.
பேரறிஞர் அண்ணாவும் முத்தமிழறிஞர் கலைஞர் உள்ளிட்ட அவரது தம்பிமார்களும் ஏராளமான புத்தகங்களை எழுதி திராவிட இயக்க கொள்கைகளைப் பரப்பினர். சென்னை புத்தகக்காட்சியை நடத்தும் பபாசி அமைப்புக்கு தன் சொந்த நிதியில் இருந்து ஒரு கோடி ரூபாய் வழங்கி ஆண்டுதோறும் சிறந்த புத்தகங்களுக்கு விருதுகள் வழங்க ஊக்குவித்தார் முத்தமிழறிஞர் கலைஞர்.
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் புத்தக வாசிப்பை ஊக்குவிப்பதிலும் எழுத்தாளர்களைப் போற்றுவதிலும் தனிக்கவனம் செலுத்திவருகிறார் கழகத்தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் M. K. Stalin அவர்கள்.
சென்னையில் மட்டும் நடந்த புத்தகக்காட்சியை மாவட்டம் தோறும் நடத்துவது, இலக்கியத் திருவிழாக்கள், உயரிய விருது பெற்ற எழுத்தாளர்களுக்கு கனவு இல்லங்கள், முக்கியமான எழுத்தாளர்களின் நூல்களை நாட்டுடைமை ஆக்குவது என்று அவரது தொடர் முன்னெடுப்புகள் அனைவராலும் பாராட்டப்படுகின்றன.
இந்த பாரம்பரியத்தில் நம் DMK Youth Wing-ம் ’முரசொலி பாசறை பக்கம்’, ‘முத்தமிழறிஞர் பதிப்பகம்’, சட்டமன்றத் தொகுதிதோறும் கலைஞர் நூலகம் என்று வாசிப்பை ஊக்குவித்து வருவது அனைவரும் அறிந்ததே. இந்தச் செயற்பாடுகளின் தொடர்ச்சியாக கழக இளைஞர் அணி முன்னெடுக்கும் முக்கியமான முயற்சி ‘முற்போக்கு புத்தகக்காட்சி’.
பொதுவாக எல்லாப் புத்தகக்காட்சிகளிலும் அரசியல் நூல்கள், ஆன்மீகப்புத்தகங்கள், பொழுதுபோக்குப் புத்தகங்கள், சமையல் குறிப்புகள், குழந்தைகளுக்கான புத்தகங்கள் என எல்லாமும் இடம்பெற்றிருக்கும். ஆனால் அரசியல் புத்தகங்கள் மட்டுமே இடம்பெறும் ‘முற்போக்கு புத்தகக்காட்சி’ என்னும் கழக இளைஞர் அணியின் முன்னெடுப்பு, தமிழ் அறிவுச்சூழலுக்கே புதிய முயற்சி.
மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம், திராவிட இயக்கம், தமிழ்த்தேசியம், பெண்ணியம் போன்ற முற்போக்கு அரசியல் சார்ந்த புத்தகங்கள் மட்டுமே இடம்பெறும் இந்த ‘முற்போக்கு புத்தகக் காட்சி’யில் அரசியல் புத்தகங்கள் வெளியிடும் பதிப்பகங்களின் 50க்கும் மேற்பட்ட அரங்குகள் இடம்பெறவுள்ளன. மேலும் முற்போக்குச் சிந்தனையாளர்களின் உரைவீச்சு, கலைநிகழ்ச்சிகள் தினமும் நடைபெறவுள்ளன.
அடுத்த தலைமுறைக்கும் அரசியல் புத்தகங்களைக் கொண்டுசெல்வோம்!
வாசிப்பை நேசித்து முற்போக்கு அரசியலை முன்னெடுப்போம்!
DMK - Dravida Munnetra Kazhagam #அறிவுத்திருவிழா